தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாந்த பொதுமக்கள்

சென்னை மதுரவாயலில் தனியார் நிறுவன விளம்பரத்தை நம்பிப் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மதுரவாயலில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் நூறு நாட்களில் இருமடங்காகத் திருப்பிக் கொடுக்கப்படும் என விளம்பரம் செய்தது. இதை நம்பிய ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் லட்சக் கணக்கில் பணம் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் அந்நிறுவனம் திடீரென மூடப்பட்டிருப்பதை அறிந்த பொதுமக்கள் இது குறித்து விசாரித்த போது நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, பாலகுமார், சுரேஷ் குமார் ஆகியோர் தலை மறைவாகியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்களின் பணத்தை வேறொரு இடத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் அங்கிருந்து பணம் வருவது தாமதம் ஆவதாகவும் முழுப்பணமும் வந்தவுடன் மக்களின் பணத்தைத் திருப்பி ஒப்படைத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version