தேசத்தின் பாதுகாப்பிற்காகவே புலனாய்வு அமைப்புகளுக்கு உளவு பார்க்கும் அதிகாரம் -அருண் ஜெட்லி

தேசப் பாதுகாப்பிற்காகவே புலனாய்வு அமைப்புகளுக்கு உளவு பார்க்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய புலனாய்வு நிறுவனங்களுக்கு உளவு பார்க்கும் அதிகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதன்படி யாருடைய தகவல் தொடர்பு சாதனங்களையும் அவர்களால் வேவு பார்க்க முடியும். இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின.

அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என்றார். இந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய அருண் ஜெட்லி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே புலனாய்வு அமைப்புகளுக்கு உளவு பார்க்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாக சுட்டிக் காட்டினார். 

தேசத்தின் பாதுகாப்பிற்காகவே உளவு பார்க்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் யாரும் அச்சப்பட தேவை இல்லை என்றும் கூறினார்.

Exit mobile version