ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், நாளை விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
சந்திராயன் திட்டத்தின் மூலம், நிலவுக்கு விண்கலம் அனுப்பி வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, நிலவின் தரையில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில், ஆய்வூர்தியுடன் விண்கலம் அனுப்பும் சந்திராயன்-2 திட்டத்தை, இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட சந்திராயன் 2 திட்டத்தை, ஜனவரி 3-ம் தேதி செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால் 2018ம் ஆண்டின் பிற்பாதியில் செயற்கைக்கோள்களை ஏவும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றதால், சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்துவது தாமதமாவதாக கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்டிருந்தபடி நாளை சந்திராயன் 2 ஏவப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, இன்னும் ஓரிரு நாட்களில் இஸ்ரோ முடிவு செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த திட்டத்தில், விண்கலம் மட்டுமல்லாமல், சிறிய அளவில் ரோபோ போன்ற ‘ரோவர்’ ஒன்றும் அனுப்பப்பட இருக்கிறது.