கொடுத்த கடனை திருப்பித் தராத காரணத்தால் கடத்தப்பட்ட நபரை போலீஸில் ஒப்படைக்கும் போது நிகழ்ந்த சாலை விபத்தில், ஒருவர் பலியான நிலையில், முக்கிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரசூல் கான் என்பவரிடம் அவர் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பல நாட்களாகியும் கொடுத்த கடனை திருப்பித் தராததால் அப்துல் கரீமை மிரட்டுவதற்காக ரசூல் கான் மற்றும் அவரது தம்பி வசீர் கான் மற்றும் நண்பர்களான பிரகாஷ் மற்றும் அமுதா ஆகியோர் விழுப்புரம் வரை அவரை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் ரசூல் கானிடம் தொடர்பு கொண்டு பேசினர். இதனையடுத்து கரீமை ஒப்படைக்க ரசூல் கான் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களது கார் விபத்துக்குள்ளானது. இதில் வசீர்கான் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தொடர்ந்து பிரகாஷ் மற்றும் அமுதாவை கைது செய்த போலீசார், அப்துல் கரீமை மீட்டனர். காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரசூல்கான் தப்பித்து ஓடிய நிலையில், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.