சொன்ன வார்த்தையை காப்பாற்றும் கட்சி அதிமுக…

தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து பேசிய முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டினார். ஆனால், சொன்ன வார்த்தையை காப்பாற்றும் கட்சி அதிமுக என முதலமைச்சர் கூறினார்.

திமுக ஆட்சிக்காலத்தில் ஏழை மாணவர்களுக்கு என எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், இந்தியாவிலேயே பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கியது அதிமுக அரசு எனவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 18 லட்சம் தாய்மார்களுக்கு அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்படுள்ளதாக கூறிய முதலமைச்சர், ஏழை எளிய மாணவர்கள் சட்டம் பயிலும் வகையில் 6 புதிய சட்டக்கல்லுரிகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

Exit mobile version