கொரோனா பீதியால் புற்றுநோயால் பாதித்த முதியவரை வெளியே நிறுத்திய வீட்டின் உரிமையாளர்!!!

கொரோனா வைரஸ் அச்சத்தால், மருத்துவமனைக்கு சென்று திரும்பிய புற்றுநோயாளியை அவரது வீட்டின் உரிமையாளர் வெளியே நிறுத்தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் சர்மா. புற்று நோயாளியான இவர், கடந்த 14ம் தேதி மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பரிசோதனைக்காக புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இதையடுத்து நேற்று 4 பேரும் வீடு திரும்பினர். ஆனால், அவர்களை உள்ளே விட மறுத்த வீட்டின் உரிமையாளர், 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார். சுமார் 8 மணி நேரம் நான்கு பேரும் வெளியே நின்றிருந்தும், வீட்டின் உரிமையாளர் மனம் மாறவில்லை. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சர்மா மற்றும் அவரது மனைவியை மட்டும் வீட்டுக்குள் செல்ல வீட்டின் உரிமையாளர் அனுமதித்தார். அவர்களது 2 மகன்களையும் உள்ளே செல்ல அவர் அனுமதிக்கவில்லை.

இச்சம்பவம் குறித்து சர்மாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.

 

Exit mobile version