தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

சென்னையில் தொற்று குறைந்த போதிலும், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால், அவர்களை முறையாக கண்காணிக்காமல் விட்டதால், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் இருந்த சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை மாவட்டம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.

கோவையில் கடந்த 11ம் தேதி 2 ஆயிரத்து 650 ஆக இருந்த தொற்று பாதிப்பு, மே 28ம் தேதி 3 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல, திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திருப்பூரில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 600க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி 925 ஆக பதிவான தினசரி கொரோனா பாதிப்பு 29ம் தேதி நிலவரப்படி ஆயிரத்து 731 ஆக பதிவாகியுள்ளது.

18 நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் இருமடங்காக பாதிப்பு அதிகரித்துள்ளது.

திருச்சியில், கடந்த 11ம் தேதி 879 ஆக பதிவான தினசரி கொரோனா தொற்று, கடந்த 26ம் தேதி ஆயிரத்து 700 கடந்து உச்சம் பெற்றிருந்தது. 28ம் தேதி நிலவரப்படி ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது

Exit mobile version