தலைமைச் செயலக ஊழியர்கள் உடை அணிவதில் புதிய கட்டுப்பாடு

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையில் தலைமைச் செயலக அரசு ஊழியர்கள், பணியாளர்கள் நேர்த்தியான உடைகளை அணிய வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டும் அணிய வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், சேலையைத் தவிர மற்ற உடைகள் அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆண் ஊழியர்கள் அனைவரும் பேண்ட் மற்றும் சட்டை அணிய வேண்டும் எனவும், டீ-சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். கோர்ட்டுகள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆஜராகும் போது, ஆண் ஊழியர்களாக இருந்தால் முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட்களை, டையுடன் சேர்த்து அணிய வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அணியும் உடைகள் மெல்லிய வண்ணத்தில் இருக்க வேண்டுமே தவிர கண்ணை பறிக்கும் அடர் வண்ணத்தில் இருக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version