திருஷ்டி கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்

நூதனமுறையில் பெண்ணிடம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தின் நெல்லூர்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. வீட்டில் தனியாக இருந்த அவரிடம் மர்ம நபர் ஒருவர், தங்களின் வீட்டிற்கு கண் திருஷ்டி இருப்பதாக கூறியுள்ளார். திருஷ்டி கழிப்பதற்காக சொம்பில் தண்ணீர் எடுத்து வரச் சொன்ன மர்மநபர், அதில் நகைகளை கழற்றி போடுமாறு தெரிவித்துள்ளார். விஜயலட்சுமியும் நகைகளை கழற்றி சொம்பில் போட்டுள்ளார். இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர், தான் வைத்திருந்த மற்றொரு சொம்பை மாற்றி வைத்துவிட்டு நகை இருந்த சொம்புடன் மாயமானதாக தெரிகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயலட்சுமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version