சவுதி பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விவகாரம் : துருக்கி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டதால் பரபரப்பு

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சவுதி அரேபியாவுக்கு எதிராக துருக்கி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, அந்நாட்டு அரசு, மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து கட்டுரை எழுதி வந்தார்.

இந்நிலையில், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற கசோக்கி, கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக சவுதிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இந்த கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சவுதி முதலில் மறுத்த நிலையில், சாட்சியங்கள் வலுவாக இருந்ததால், பின்னர் ஒப்புக்கொண்டது. இது தொடர்பாக, ஏற்கனவே துருக்கி, சவுதிக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, துருக்கி தொலைக்காட்சி ஒன்று, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அதிகாரியின் இல்லத்திற்கு, கசோக்கியின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை, 3 நபர்கள் பெரிய பை ஒன்றில் எடுத்துச் செல்வது போல் உள்ளது. இந்த இல்லம் சவுதி தூதரகத்திற்கு அருகில் தான் அமைந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version