காற்று வெளியிடை படத்துடன் பொருந்திப் போகும் அபிநந்தனின் வாழ்க்கை

காற்று வெளியிடை படத்துக்காக தந்தை வர்தமான் சொல்லிய காட்சிகள் மகன் அபிநந்தனுக்கு பொருந்திப்போனது அனைவரின் மனதை வருத்தமடையச் செய்துள்ளது.

சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்த விமானி அபிநந்தன், பாகிஸ்தான் படைகளிடம் சிக்கினார். இதையடுத்து ஜெனிவா ஒப்பந்தப்படி போர் வீரர்களை எப்படி நடத்த வேண்டுமோ அவ்வாறு அபிநந்தன் நடத்தப்பட வேண்டும் என உடனடியாக பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால் அபிநந்தன் பிடிபட்டவுடன் வெளியான வீடியோவில் காயங்களுடன் காணப்பட்டார். பின்னர், வெளியான வீடியோவில் சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் காணப்பட்டார்.

இதேபோன்ற காட்சிகள் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தில் இடம்பெற்றன. காற்று வெளியிடை படத்தின் காட்சிகளும், அபி நந்தனுக்கு நிகழ்ந்தவையும் கிட்டத்தட்ட ஒன்றாக அமைந்தன.

நடிகர் கார்த்தி எதிரி நாட்டு படையிடம் சிக்கி கொள்வதாகவும், அங்கிருந்து அவர் தப்பி வருவது போலவும் திரைக்கதை அமைத்திருப்பார்கள். அனுபவமிக்க ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியிடம் சம்பவங்களை கேட்டே, அந்த காட்சிகளை அமைத்திருந்தார் மணி ரத்தினம்… அந்த அனுபவம் மிக்கவர் யார் என்று தெரிந்து கொண்டால் நமக்கு வியப்பு கலந்த அதிர்ச்சி ஏற்படுகிறது.

ஆம் …. வர்தமான் என்ற அனுபவமிக்க முன்னாள் விமானப்படை அதிகாரிதான், மணிரத்திற்கு அந்த காட்சிகளை சொன்னவர். அந்த வர்தமான் வேறு யாருமல்ல… தற்போது பாகிஸ்தான் படையிடம் சிக்கியுள்ள அபிநந்தனின் தந்தை தான் இந்த வர்தமான்… தந்தை சொல்லிய காட்சிகளே மகனுக்கு நிஜத்தில் பொருந்தி வரும் என அவர் நினைத்திருப்பாரா? அல்லது யார்தான் நினைத்திருப்பார்கள் ? ஆனால் காலம் எல்லாவற்றையும் நிகழ்த்திகாட்டும் என்பதற்கு அபி நந்தனே உதாரணம்…

Exit mobile version