ப.சிதம்பரத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு- முழு விபரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு. மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ‘ஐ.என்.எக்ஸ் மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம், 2007ஆம் ஆண்டில் விதிமுறைகளை மீறி 305 கோடி ரூபய்க்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது.

இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக தனது தந்தை ப.சிதம்பரத்தின் பெயரை பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும், இதனால், அவரது நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் லஞ்சமாக வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து 2017ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக்-அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கார்த்திக் சிதம்பரம் இந்த வழக்கில் கைதாகி பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்பதால், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அளித்த வாக்குறுதிகளின் படி சிதம்பரம் நடந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், கடந்த ஜூலை 11 அன்று ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி அரசுத்தரப்பு சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்தார். இதனால் ப.சிதம்பரத்திற்கு எதிரான சாட்சியங்கள் வலுவடைந்தன.

எந்த சூழலிலும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு ப.சிதம்பரம் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை டெல்லி உயர்நீதிமன்றத்தை வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

Exit mobile version