'சிந்துபாத்', 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படங்களை வெளியிட இடைக்கால தடை

முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதியின் சிந்துபாத் மற்றும் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படங்களை வெளியிட ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சிந்துபாத் மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களையும், கேப்டன் என்ற நிறுவனத்தின் சார்பில் ராஜராஜன் என்பவர் வெளியிட உள்ளார். இந்நிலையில், பாகுபலி திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட இவர், வெளியீட்டிற்கான 17 கோடி ரூபாய் பணத்தை படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, பணத்தை திருப்பித் தராமல், வேறு படங்களை ராஜராஜன் வெளியிடக் கூடாது என்று, பாகுபலி தயாரிப்பு நிறுவனம் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரண்டு படங்களையும் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version