மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் : மாநில தேர்தல் ஆணையம்

தமிழகம் முழுவதும் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற உள்ள மறைமுகத் தேர்தல், முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த லலிதா மற்றும் முதுகுளத்தூரைத் சேர்ந்த முருகன் ஆகியோர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக தேர்தல் ஆணையம் அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பில், தமிழகம் முழுவதும் 11ம் தேதி நடைபெற உள்ள மறைமுகத் தேர்தல், வீடியோ பதிவு செய்யப்படும் என்றும், இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஜனவரி 21ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Exit mobile version