தனி மாவட்டமாகும் ராணிப்பேட்டை உருவான வரலாறு

வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணிப்பேட்டையானது தற்போது தனி மாவட்டமாகிறது.

வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை நகருக்கென்று ஒரு தனி சிறப்புண்டு. கி.பி 1714ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனக்கு கப்பம் கட்ட மறுத்த செஞ்சியின் மன்னர் ராஜா ஜெய்சிங் என்ற தேசிங்கு மீது ஆற்காடு நவாப் சாதத்துல்லாக்கான் போர் தொடுத்தார்.இப்போரில் ராஜா தேசிங்கு வீர மரணமடைந்தார். இத்துயர செய்தியை கேட்ட ராஜா தேசிங்கின் மனைவியான ராணிபாய் உடன் கட்டை ஏறி தன் உயிரையும் நீத்தார்.இதனால் இவர்கள் இருவரின் தியாகத்தை மெச்சிய ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான் ராஜா தேசிங்கு, அவரது மனைவியான ராணிபாய் ஆகிய இருவருக்கும் ராணிப்பேட்டை பாலாற்றங்கரை ஓரத்தில் பளிங்கு கற்களால் ஆன இரு நினைவுச் சின்னங்களை எழுப்பினார். அத்துடன் தேசிங்கு ராஜனின் மனைவியின் கற்புத்திறனை பறைசாற்றும் விதமாக ராணிப்பேட்டை என்ற நகரையும் நிர்மாணித்தார். ராஜா தேசிங்கின் மனைவி ராணிபாய் நினைவாகத்தான் கடந்த 308ஆண்டுகளாக ராணிப்பேட்டை என பெயர் வந்ததற்கான காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியாக1866-ல் வாலாஜாபேட்டை நகராட்சி தொடங்கப்பட்டது.தென்னிந்தியாவில் முதல் ரயில் சேவை 1856 ஜூலை 1-ல் சென்னை ராயபுரத்திலிருந்து வாலாஜா ரோடு வரை இயக்கப்பட்டது.

ஆங்கிலேயர் காலத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் ஐடாஸ்கடர் என்பவரால் துவங்கப்பட்ட எஸ்.எம்.எச்.மருத்துவமனையும் அமைந்துள்ளது. அதே போல் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மகாத்மா காந்தியின் நினைவாக முதல் சிலை அவர் இறந்த 13 நாட்களுக்குள் ராணிப்பேட்டையில் தான் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி புகழ்வாய்ந்த ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினத்தன்று அறிவித்தார். இதன் தொடக்க விழாவை வரும் 28ம் தேதி தமிழக முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.

மேலும் இந்தப் பகுதியில் விவசாயமும் அதிகரித்து காணப்படும் ஆற்காடு பகுதியில் கிச்சிலி சம்பா நெல் அதிக அளவில் பயிரிடப்படும். இந்த கிச்சிலி சம்பா நெல் உலக அளவில் பெயர் பெற்றதாகும்.

Exit mobile version