விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் தங்கமணி

உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக அரசு திறந்த மனதுடன் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டத்திற்கான பூமி பூஜையில், அமைச்சர் தங்கமணி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு, பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர், 6 சட்டமன்ற தொகுதிகளில், பொங்கல் சிறப்புத் தொகுப்பை அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, விவசாய விளைநிலங்கள் வழியே உயர் அழுத்த மின்தடம் அமைக்கும் பணிகளில், எதிர்க்கட்சியின் தூண்டுதலாலேயே ஒருசிலரால் போராட்டங்கள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று கூறினார். தமிழக அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் உள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Exit mobile version