1330 திருக்குறள் வாசித்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவி

தஞ்சாவூரில், தனது பிறந்தநாளைத் திருக்குறள் வழியில் கொண்டாடிய பள்ளி மாணவியைப் பல்வேறு பிரிவினரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த குணசேகரன் – சாந்தி தம்பதியின் மகள் தேவஸ்ரீ. 8ஆம் வகுப்பு படித்து வரும் இவர், திருக்குறள் போட்டியில் பங்கேற்றுப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். இந்நிலையில் தனது 13ஆவது பிறந்தநாளைப் புதுமையாகக் கொண்டாடும் வகையில் தன்னுடன் திருக்குறள் பயின்ற மாணவர்களுடன் இணைந்து தனித்தனியாக 1330 குறளையும் வாசித்து, திருக்குறள் முற்றோதல் செய்து திருவள்ளுவருக்குப் பெருமை சேர்த்தார்.

மேலும் வழக்கமான பாணியில் பிறந்தநாள் கேக் வெட்டாமல் தனது வீட்டில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குத் திருக்குறள் கூறி மலர்தூவி மரியாதை செய்தார். திருக்குறள் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துப் பெற்றார். மாணவியின் இந்தச் செயலை அனைத்துப் பிரிவினரும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version