பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தையை நடைபாதை வியாபாரியிடம் கொடுத்த பெண் தலைமறைவானதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவர் திருவள்ளூர் பேருந்துநிலைய நடைபாதையில் வேர்கடலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று பேருந்துநிலையத்தில் காத்திருந்தவரிடம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை கொடுத்துள்ளார். அப்போது குழந்தையின் தாய் கழிவறைக்கு சென்றிருப்பதாக கூறி அவரை அழைத்து வருவதாக சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வராததால் கோவிந்தம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் அளித்தார். பின்னர், குழந்தையை திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.