மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

வீட்டை காலி செய்யுமாறு அண்ணன், தம்பி குடும்பத்தினர் துன்புறுத்தியதால், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் 7 வருடங்களுக்கு முன் இறந்த நிலையில், மகள், மகனுடன் பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த வீட்டை காலி செய்யுமாறு, பஞ்சவர்ணத்தின் அண்ணன், தம்பி குடும்பத்தினர் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பஞ்சவர்ணம், குடும்பத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அவர்களை காப்பாற்றிய போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Exit mobile version