சென்னை தியாகராய நகரில் பேருந்தின் இடையில் சிக்கி பெண் உயிரிழப்பு

 

சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி வள்ளி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கு மாம்பபலம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் சுக்தேவ். இவர் தனியார் சமையல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வள்ளி, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இன்று அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்ற அவர், தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அங்கிருந்த மாநகர பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த வள்ளியை மற்றொரு மாநகர பேருந்து இடித்து நசுக்கியதில் வள்ளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாம்பலம் காவல்துறையினர் வள்ளியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வள்ளி மீது மோதிய பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் கன்னியப்பன் மற்றும் மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் ரவி ஆகியோர் மீது மாம்பலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததோடு அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version