இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று துவக்கம்

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தலா 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. முதலில் நடந்த இருபது ஓவர் தொடரில் இந்திய அணி 2க்கு ஒன்று என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 9 இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளதால், இந்த முறையும் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் நடந்த டி20 தொடரில் ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி உள்ளதால் இவர்களே தொடக்க வீரர்களாக நீடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

கைரன் போலார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியில் எவின் லூயிஸ், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் ஆகியோர் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்பதால் இப்போட்டியில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ரசிகர்கள் மத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் 130 முறை மோதியுள்ள ஆட்டங்களில் தலா 62 வெற்றிகள் பெற்று சமநிலை வகிக்கின்றன. 2 போட்டி சரிசமனில் முடிந்துள்ள நிலையில், 4 ஆட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

Exit mobile version