நாடுமுழுவதும் தேர்தல் பறக்கும் படை சோதனை தீவிரம்

நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட பல்வேறு கட்ட சோதனைகளில் 2 ஆயிரத்து 626 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களில் நடைபெறவுள்ள நிலையில் நேற்று முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது.

தேர்தலையொட்டி கடந்த மாதம் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி மக்கள் அதிகமாக புழங்கும் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 2 ஆயிரத்து 626 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் ரொக்கமாக மட்டும் 607 கோடி சிக்கியுள்ளது. மேலும் ஆயிரத்து 91 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனையில் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் 486 கோடி ரூபாய்க்கும், இலவச பொருட்கள் உள்ளிட்ட இதரப் பொருட்கள் 48 கோடி ரூபாய்க்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version