3 வயது சிறுவன் மீது மோதிய திமுக பிரமுகரின் கார்

சென்னை அண்ணா நகரில், அதிவேகமாக சென்ற திமுக பிரமுகரின் கார், 3 வயது சிறுவன் மீது மோதியதில், பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சென்னை அண்ணா நகர் பகுதியில் சாலை ஓரத்தில் வசித்து வருபவர் மணி. இவருடைய மனைவி மற்றும் மகன் கவுதம் ஆகியோர், அண்ணாநகர் மூன்றாவது அவன்யூ பகுதியில் சாலை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த திமுக பிரமுகரின் கார், சிறுவன் மீது பலமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சிறுவனை, தலையில் பலத்த காயங்களுடன் மீட்ட பொதுமக்கள், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதித்தனர். சிறுவன் மீது மோதிவிட்டு காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பிச் சென்ற திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

 

Exit mobile version