திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மக்கள் நலனுக்காக பாடுபட்டதில்லை-துணை முதல்வர்

திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இதுவரை மக்கள் நலனுக்காக பாடுபட்டதில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார்.

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இதுவரை மக்கள் நலனுக்காக பாடுபட்டதில்லை என குற்றம்சாட்டினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மட்டும்தான் மக்களுக்கான நல்ல பல திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

ஆம்பூரில் வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், வன்முறையை கட்டவிழ்த்துவிடும் கட்சியாக திமுக இருப்பதை மக்கள் அறிவார்கள் என்றார். தமிழ் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில், திமுகவினர் மீது குற்றம்சாட்டப்பட்டு, நீதிமன்றம் தண்டனை வழங்கி இருப்பதை துணை முதல்வர் தெரிவித்தார்.

குடியாத்தத்தில் வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் வேலூர் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மூர்த்திக்கு ஆதரவாக துணை முதல்வர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக பெருமிதத்துடன் கூறினார்

Exit mobile version