கோவில் காளை இறந்ததால் 18 ஊரைச் சேர்ந்த மக்கள் துக்க அனுசரிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, இறந்து போன கோயில் காளையை, அந்த ஊர் மக்கள், தாரை தப்பட்டை மரியாதையுடன் ஊர் மந்தையில் அடக்கம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொட்டபட்டி அருகே உள்ளது பேர் நாயக்கனூர். இங்குள்ள பெருமாள் சாமிக்கு கோவில் காளை உள்ளது. பூமிராஜ் நாயக்கர் பராமரிப்பில் இருந்த கோயில் காளை பல்வேறு எருது ஓட்டங்களில் கலந்து கொண்டு, பரிசுகளைப் பெற்று, ஊருக்கு பெருமை சேர்த்தது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக, உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்தக் காளை இறந்து போனது. இதையடுத்து, 18 ஊர்களில் இருந்தும் தாரை தப்பட்டையுடன் வந்த கிராம மக்கள், இறந்த கோயில் காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து உருமி முழங்கத் தேவராட்டம், கோலாட்டம் ஆடியும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் இறுதி மரியாதை செய்தனர். பின்னர் முறைப்படி அடக்கம் செய்தனர்.

 

Exit mobile version