பாகிஸ்தானிலேயே பயங்கரவாதிகளை தாக்கியது, காங்கிரஸ் கட்சிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாமில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வரலாற்றிலேயே முதன்முறையாக பாகிஸ்தானிலேயே பயங்கரவாதிகளை நாம் வீழ்த்தியுள்ளதாகவும், ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியை தவிர ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பக்கம் நின்றதாக பேசிய மோடி, இதனால் காங்கிரஸ் கட்சி தனது தூக்கத்தை இழந்து தவித்து வருவதாக கூறினார். வெறும் பாதிப்பை மட்டுமே அனுபவிக்கும் நாடாக இந்தியாவை காங்கிரஸ் கட்சி வைத்திருந்ததாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, வலுவிழந்த அரசு வேண்டுமா அல்லது வலிமையான அரசு வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.