போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை, பசுமை வழிச்சாலையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருத்து கொடுத்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனுடன்  பொம்மையும் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலியோ இல்லாத நிலை தமிழகத்தில் தொடர, போலியோ சொட்டு மருந்து முகாமை பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version