மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினம் : முதல்வர், துணை முதல்வர் மரியாதை

மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 72-வது நினைவு தினம், நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழக அரசு சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த, காந்தி அடிகளின் திருவுருவப் படத்திற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, தலைமைச் செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உறுதி மொழி ஏற்றனர். உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் செயலாளர்கள், அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Exit mobile version