மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்திய அணி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது. இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷை ஹோப் 42 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். ரோஸ்டன் சேஸ் 38 ரன்களுக்கும், ஹெட்மேயர் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகோலஸ் பூரனுடன் கேப்டன் பொல்லார்ட் கைக்கோர்த்தார். விக்கெட் விழாமல் அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 135 ரன்கள் குவித்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். நிகோலஸ் பூரன் 64 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில், 50 ஓவர் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் சைனி மட்டும் 2 விக்கெட் கைப்பற்றினார். தாகூர், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, 316 ரன்கள் வெற்றியை நோக்கி இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களான ரோகித் மற்றும் ராகுல் இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்தை நிதானமாக எதிர்கொண்டு விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் வரை குவித்தது. ரோகித் சர்மா 63 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் கேட்ச் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணி 30-வது ஓவரின் போது 167 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய அய்யர், ரிஷப் பந்த், ஜாதவ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுக்க இந்திய 228 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. இருந்தாலும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பெரும் தலைவலியாக விராட் கோலி ஆடி வந்தார். அவரது விக்கெட்டை மட்டும் வீழ்த்த முடியாமல் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து பந்துவீசினர்.

விராட் கோலியும் 80 ரன்கள் தாண்டி நிலையில் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியில், ஏமாற்றமே மிஞ்சியது. 81 பந்துகளில் 85 எடுத்து கோலி ஆட்டமிழந்தார். இறுதியில், ஜடேஜா 39 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Exit mobile version