முதல் ஒருநாள் போட்டியில் அய்யர்- ரிஷப் பந்த் அரைசதம்; மே.இ.தீவுகள் அணிக்கு 289 ரன்கள் இலக்கு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதனையடுத்து, தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித், ராகுல் களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரிலேயே துல்லியமாக மெதுவாக பந்துவீசி இந்திய அணி வீரர்களை ஆட விடாமல் தடுமாறச் செய்தனர்.  போட்டியின் 7-வது ஓவரின் போது, கே.எல்.ராகுல் விக்கெட்டை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் காட்ரெல், அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் வீராட் கோலி விக்கெட்டையும் 4 ரன்கள் மட்டுமே எடுக்கவிட்டு, மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.

மற்றொரு முனையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்  56 பந்துகளிம் 36 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். 19-வது ஓவரின் போது இந்திய அணி 80 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

இதனையடுத்து, சரிவில் இருந்த இந்திய அணியை தூக்கி நிமிர்த்தும் முயற்சியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் ஈடுபட்டனர். 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த ரிஷப் பந்த் பொறுமையை கடைப்பிடித்து அய்யருடன் நிதானமாக விளையாடினார். இதனைத் தொடர்ந்து அய்யர் மற்றும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப்பரில் 114 ரன்கள் எடுக்கப்பட்டது.

இந்திய அணியின் ரன்கள் 194 ஆக இருக்கும் போது ஜோசப் பந்தில் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 88 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இதேபோல், 69 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பந்த் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜாதவ் 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 288 ரன்கள் எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் சிறப்பாக பந்துவீசிய காட்ரெல், கீமோ பவுல், ஜோசப் ஆகிய 3 பேரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ள 289 ரன்களை நோக்கி மேற்கிந்திய தீவுகள் விளையாட இருக்கின்றனர்.

Exit mobile version