தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 48 மணி (07.10.2020) நேரத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9ஆம் தேதி, அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும். அதையடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸூம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொடநாடு (நீலகிரி) 1 செ.மீ. மழை அதிபட்சமாக பதிவாகி உள்ளது.

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 8 ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version