தமிழ்நாட்டில் புதிதாக 4 ஆயிரத்து 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 4 ஆயிரத்து 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 2 பேர் உள்பட, மாநிலம் முழுவதும் புதிதாக 4 ஆயிரத்து 512 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

39ஆயிரத்து 335 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 599 பேர் ஆண்கள் என்றும், ஆயிரத்து 913 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 275 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 237 ஆக உள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 563 பேரும், ஈரோட்டில் 493 பேரும், சேலத்தில் 302 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று, திருப்பூரில் 281 பேரும், செங்கல்பட்டில் 229 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6 ஆயிரத்து 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 118 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 71 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 47 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Exit mobile version