தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியானது

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த 2016ஆம் ஆண்டு கால அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், திமுகவினர் தொடுத்த வழக்கால், தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பின் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் ஆறு முறை நீட்டிக்கப்பட்டது. தடையை நீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான மாநிலத் தேர்தல் அலுவலர், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. உள்ளாட்சித் தேர்தலுக்காகத் தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version