தமிழ்நாட்டில் உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா!

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நேற்று இருவர் மட்டுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 25 முதல் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து எமது செய்தியாளர் மருத்துவமனை பகுதியில் களஆய்வு மேற்கொண்ட போது, சுமார் 25 முதல் 40 நபர்கள் வரை உயிரிழந்ததாக அங்கிருந்த கடைநிலை ஊழியர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் தகவல் அளித்தது அவர்கள் தான் என்று தெரிந்தால் அவர்களது வேலை பறிபோய்விடும் எனவும், இந்த விஷயத்தை எப்படியாவது வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதனிடையே, உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவும், இறப்பு சான்றிதழ் பெறுவதற்கும் லஞ்சம் கேட்பதாகவும், இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனிடம் கேட்டபோது, அது தவறான தகவல் என்றும் இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும் தேனி மாவட்டத்தில் உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுவதாகவே தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Exit mobile version