வீரத்தம்பதியர்களுக்கு தமிழக அரசு விருது அறிவிப்பு

நெல்லையில், வீட்டில் புகுந்த திருடர்களை, துணிச்சலுடன் அடித்து விரட்டிய தம்பதியருக்கு, அதீத துணிவுக்கான விருது வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் கடையத்தில் சண்முகவேல் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொடுக்குமாறும், இல்லாவிட்டால் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிடப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். இதற்குச் சற்றும் அஞ்சாத சண்முகவேலும் அவர் மனைவி செந்தாமரையும், நாற்காலியாலும், கையில் கிடைத்த பொருட்களாலும் திருடர்களை அடித்து விரட்டினர். திருடர்கள் வந்தால் அஞ்சாமல் எப்படி எதிர்த்து துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்பதைக் காட்டும் வகையில் இருந்த இந்தக் காட்சி, அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்தக் காட்சி செய்தித் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவியதை அடுத்து, அந்த தம்பதியருக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில், அந்தத் தம்பதியருக்கு அதீத துணிவுக்கான விருது வழங்க, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பரிந்துரைத்தார். இதனை தொடர்ந்து, அவர்களுக்கு விருது வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நாளை சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், அவர்களுக்கு விருது வழங்கப்படும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version