அட சண்டை போடாதீங்கப்பா! பேரவையில் திமுக காங்கிரஸ் கட்சியினரிடையே முட்டல் மோதல்

அண்ணாவின் பெயரை மறந்த பெரியாரின் பேரன் திருமகனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் திமுக, காங்கிரஸ் கட்சியினரிடையே முட்டல் மோதல் நீடித்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினரும், தந்தை பெரியாரின் பேரனுமான ஈ.வெ.ரா. திருமகன், ஓமந்தூரார், காமராஜர், கருணாநிதி இடம்பெற்றிருந்த பேரவையில் தானும் உறுப்பினராக இருப்பதாகப் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர் துரைமுருகன், அண்ணாவின் பெயரை குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை, கருணாநிதி பெயரை குறிப்பிட்டால் அண்ணா பெயரை குறிப்பிட்டது போல என்று கூறினார்.

அப்போது, செல்வப் பெருந்தகை பேசினால் காமராஜர் பேசியது போல் எடுத்துக் கொள்ளலாமா? என துரைமுருகன் கிண்டலாகக் கேட்டார்.

இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர் திருமகன், தவறுதலாக அறிஞர் அண்ணாவின் பெயரை மறந்துவிட்டதாக கூறினார்.

பெரியாரின் பேரன், அண்ணாவின் பெயரை மறந்ததால் பேரவையில் சில நேரம் திமுக காங்கிரஸ் கட்சியினரிடையே முட்டல் மோதல் நீடித்தது.

Exit mobile version