ஓட்டு அரசியல் பிழைப்புக்கு ஒருசிலர் திட்டமிடுவதை ஒருபோதும் தமிழினம் ஏற்காது – முதலமைச்சர்

புதுச்சேரியில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் உருவச்சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓட்டு அரசியல் பிழைப்புக்கு ஒருசிலர் திட்டமிடுவதை ஒருபோதும் தமிழினம் ஏற்காது என, தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருடங்கள் கரைந்தாலும், வளர்பிறய் சந்திரனாய் நிலைத்த புகழ் கொண்ட நிகரில்லா வள்ளலாகவும், சாதி, மதங்கள் கடந்த சமத்துவத்தின் அடையாளமாகவும், இன்றளவும் ஏழை, எளியோரது இல்லத்திலும், உள்ளத்திலும் நிறையாசனமிட்டு வீற்றிருக்கும் தன்னிகரில்லா தலைவராகவும் பாரத ரத்னா இதய தெய்வம் புரட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.போற்றி வணங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது திருஉருவச்சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டித்தக்கது எனவும், சமீபகாலத்தில் இதுபோன்ற சமூகத்துக்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது எனவும் தெரிவித்துள்ளார். உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களை பிறர் ஏற்க பாடுபடுவது மட்டுமல்ல எனவும், மாற்று கருத்துக்களையும் குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பது ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து சுதந்திரமென்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனங்களை காயப்படுத்துவது மனித நாகரீகத்துக்கு மாறான செயல் எனவும் முதலமைச்சர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மொழியால், இனத்தால், மதத்தால், சாதியால் வேறுபட்டு இருந்தாலும், இந்தியர் என்கிற ஒற்றை சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும் அதன் மூலம் ஓட்டு அரசியல் பிழைப்புக்கும் சிலர் திட்டமிடுவதை ஒரு போதும் தமிழினம் ஏற்காது என்றும் கூறியுள்ளார். ஆன்மீக செம்மல் அரவிந்தரும், உணர்ச்சி கவிஞர் பாவேந்தரும் உதித்த புதுச்சேரி மண்ணில், புரட்சித் தலைவரின் திருஉருவச் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களை தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுச்சேரி முதலமைச்சரை கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version