தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கண்டனம்

ஊகங்களின் அடிப்படையிலான செய்திகளால் நேர்மையாக பங்கேற்கும் தேர்வர்களின் திறமையை குறைத்து கூறுவது வருத்தமளிப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஊகங்களின் அடிப்படையில் வெளியாகும் செய்திகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட குரூப் 2 தேர்வில் 1997ஆம் ஆண்டு பிறந்த தேர்வர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பதாக சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐயங்கள் தொடர்பாக தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் தவறு ஏதும் நடைபெறவில்லை என ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. அடுத்தவாரம் குரூப் 2 கலந்தாய்வு நிறைவு பெற்று தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிவற்ற உடன் தேர்வர்கள் முழு விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவது நல்ல முறையில் தேர்விற்கு தங்களை தயார் செய்து அவர்களுக்கு நேர்மையாக பங்கேற்கும் தேர்வர்களின் திறமையை குறைத்து கூறுவது வருத்தத்தை அளிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான வாதங்கள் பரப்புவோர் மீது தேர்வாணையம் தனது கண்டனத்தை பதிவு செய்வதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version