கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது!

இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பொதுமக்கள் பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை இயக்குநர் ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்படுவவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், சென்னையில் மட்டும் 17,500 படுக்கை வசதிகள் உள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version