காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு தீவிரம்

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 12 ஆயிரத்து 616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தற்போது 2 ஆயிரத்து 896 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் தகுதியும், அனுபவமும் உள்ள ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஏற்கெனவே பொறுப்பான வகையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை காலி பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இந்தநிலையில், முதல் கட்டமாக, மாதம் 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் ஓராண்டு அல்லது தேவையான காலம் வரை தொடர அனுமதிக்கலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version