புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது…

தமிழகத்தில், கடந்த ஆண்டு 9 புதிய மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்ட, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, இராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில், புதிய மருத்துவமனை கட்டடங்கள் கட்டுவதற்கு, தமிழக அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து, எஞ்சியுள்ள, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய மாவட்டங்களில், அரசு மருத்துவமனைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில், மருத்துவமனையின் ஆரம்பக்கட்ட பணிகளுக்கு தமிழக அரசு தலா 70 கோடி ரூபாய் நிதி ஒதுகீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட உள்ள 9 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும், ஓராண்டில் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 24 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிய மருத்துவமனைகளுடன் சேர்த்து, மருத்துவமனைகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version