சுஷாந்த் சிங் ராஜ்புத் இறுதிச்சடங்கு இன்று மும்பையில் நடைபெற உள்ளதாக தகவல்!

மும்பையில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சுஷாந்த் சடலமாக தொங்கினார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுஷாந்தின் இந்த விபரீத முடிவு பாலிவுட் திரையுலகினர் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுஷாந்த், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. நடிகர் சுஷாந்தின் தந்தை மற்றும் குடும்பத்தினர் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ளதால், அவர்கள் வருகைக்கு பின் இறுதிச்சடங்கு மும்பையில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், பொழுதுபோக்கு உலகில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வளர்ச்சி பலருக்கு உத்வேகம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version