மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் அரசு அதிமுக

 திருப்போரூரில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக அங்குள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாமி தரிசனத்திற்கு பின்னர்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் துணை முதலமைச்சரிடம் ஆசி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த துணை முதலமைச்சர், மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் அரசாக அதிமுக விளங்கி வருவதாக கூறினார். காவிரி பிரச்சனைக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தீர்வு காணப்படவில்லை என குற்றம்சாட்டினார்.  மேலும் இலங்கை தமிழகர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ் கூட்டணியே காரணம் என குற்றம்சாட்டிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்யூரில் நாடாளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நல்லவர்கள் மட்டும் சேர்ந்து நல்ல கூட்டணியை அமைத்துள்ளதாகவும், 2021க்குள் 14 லட்சம் குடிசை வீடுகளுக்கு பதிலாக தரமான காங்கிரீட் வீடுகள் அமைத்து தரப்படும் எனவும் உறுதியளித்தார்.

Exit mobile version