கோவையில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த கட்டுப்பாடும் இல்லை

கோவையில் ஞாயிற்றுக் கிழமைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான திரையரங்குகள், மார்க்கெட், ஜவுளிகடைகள், நகைகடைகள், பொழுதுபோக்கு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், தனியார் கேளிக்கை விடுதிகள்ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்களில் நடைபெரும் சுப நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை ஒரு வாரத்திற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் தெரிவிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை முடிவு அல்லது கோவிட் இன்மை சான்று வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அல்லது கொரோனா தடுப்பூசி 2 தவணைகளும் செலுத்தப்பட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இருந்து வரும் மாணவர்கள் அனைவருக்கும் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த விற்பனை மார்க்கெட்டுகள் 50 சதவீத கடைகளுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version