பெண் கொரோனா நோயாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பெண் கொரோனா நோயாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, நகை மற்றும் பணத்திற்காக அந்த பெண்ணை கொலை செய்த மருத்துவமனை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேற்கு தாம்பரத்தை சுமிதா என்பவர், கடந்த மாதம் 21ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சுமிதா திடீரென காணாமல் போன நிலையில், கடந்த 8-ம் தேதி மருத்துவமனையின் டவர் மூன்றில் உள்ள 8-வது தளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், மருத்துவமனை ஒப்பந்த பெண் ஊழியரான ரதிதேவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், 9 ஆயிரத்து 500 ரூபாய் பணம், நகை மற்றும் செல்போனுக்காக சுமிதா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, கடந்த 10-ம் தேதி சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், சுமிதாவின் மரணம் கொரோனா நோயின் தாக்கத்தால் உண்டானதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version