மரம் வளர்க்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட விதைப்பந்து தயாரிப்பு நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் விதைப்பந்து தயாரித்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியில், உள்ள தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் விதைப்பந்து தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மழை காலங்களில் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் தூவப்படும் விதைப்பந்துகளால் இயற்கைவளம் மேம்படுத்தப்படும் என்பது குறித்து மாணவர்களிடையே இப்பழக்கத்தை உருவாக்க பேரூராட்சி வளம் மீட்பு உர பூங்காவில், தனியார் அறக்கட்டளை மற்றும் பேரூராட்சி இணைந்து விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனடிப்படையில், தொடக்க பள்ளியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாகை, வேம்பு, தான்றிக்காய், இலுப்பை மற்றும் மலைவேம்பு உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்கை விதைகளை கொண்டு விதைப்பந்துகளை தயாரித்தனர்.