விருதாச்சலம் மாணவி கொலை வழக்கு : மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

விருதாச்சலத்தில் கல்லூரி மாணவி கொலை வழக்கு தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் பாமகவினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த கருவேலங்குறிச்சி பகுதியில் திலகவதி என்ற கல்லூரி மாணவியை ஆகாஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்தார். கொலைச் சம்பவம் தொடர்பாக போலிசாரிடம் ஆகாஷ் வாக்குமூலம் அளித்த வீடியோவும் வெளியானது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஒருதலைபட்சமாக செயல்படும் கருவேலங்குறிச்சி எஸ்.பி. சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் குற்றவாளியின் வாக்குமூலத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் மற்றும் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணவியின் பெற்றோர் தங்கள் மகளின் இழப்பிற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Exit mobile version