சமூகத்தின் இரைச்சலைக் கேட்டு ஒரு போதும் உங்கள் மனக்குரலின் சப்தத்தை ஒதுக்கிவிடாதீர்கள் எனக் கூறி, தனித்துவமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற மனிதன், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு.
1954 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 ஆம் தேதி, கல்லூரிக் காதலர்களான, அப்துல்ஃபட்டா ஜந்தாலி மற்றும் ஜோன் ஷிபிள் என்பவர்களுக்கு மகனாக பிறந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். பின் பால், கிளாரா தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார்.
கல்லூரியில் சேர்ந்த 6 மாதத்திலேயே கல்லூரி படிப்பை நிறுத்தி, பின் தனக்கு விருப்பமான வீடியோ கேம் நிறுவனத்தில் சேர்ந்தார். நிலையில்லாத அந்த காலகட்டத்தில் இந்தியாவிற்கும் ஆன்மீக தேடலுக்காக வந்து சென்றார்.பின்னர் ஸ்டீவ் ஆஸ்மிக் உடன் சேர்ந்து, கார் கேரேஜில் தொடங்கிய நிறுவனமே “ஆப்பிள்”. 10 லட்சம் ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் விற்று மிகப்பெரும் சாதனை படைத்தது ஆப்பிள் நிறுவனம்.
ஒருகட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. செய்வது அறியாது திகைத்து நின்றவருக்கு தோன்றிய அடுத்த யோசனை, நெக்ஸ்ட் (NEXT) நிறுவனம்.
அதே சமயம் ஆப்பிள் நிறுவனம் ஆட்டம் கண்டு கொண்டிருந்ததை கவனித்த ஸ்டீவ், தனது நெக்ஸ்ட் நிறுவனத்தை, ஆப்பிளிடமே விற்று, அதன் 1.5 பில்லியன் பங்குகளை வாங்கினார். 1999-ல், ஈ- புக், 2001 -ல் ஐ டியூன்ஸ் சாஃப்ட்வேர், ஐ- பாட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப சரித்திரத்தை புரட்டிப் போட்டர். இன்று உலகத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் “ஐ போன்”-ஐ 2007-ல் அறிமுகப்படுத்தினார்.ஸ்டீவிற்கு, 2003 -ல் கணையம் மற்றும் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியது.
தான் இறப்பது உறுதி என அவருக்கே தெரிந்ததால், தனக்கு பின் ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்த “டிம் குக்கை” நியமித்தார். 2011 ஜூன் 7ம் தேதி “குப்பெர்டினோ மாநாட்டில்” கலந்து கொண்டு நிகழ்த்திய உரையே, அவரது கடைசி உரையாக அமைந்தது.அதன் பிறகு ஸ்டீவ், 2011 ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி உயிரிழந்தார்.
அவர் மறைந்தாலும், இன்றும் அவரது நிறுவனத்தின் பொருட்களின் தரமும், அதன் மீதான எதிர்பார்ப்பும் குறையவே இல்லை. அவர் விட்டு சென்ற ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு, 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.