அரசின் நலத்திட்டங்களை குறை சொல்வதே ஸ்டாலினுக்கு வேலை: அமைச்சர் எம்.சி.சம்பத்

தமிழக அரசின் நலத்திட்டங்களை குறை சொல்வதை திமுக தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டிருப்பதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கிண்டியில், ஆறாவது உலக தமிழர் பொருளாதார மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், இந்திய வெளியுறவுத் துறை செயலர் டி.எஸ்.மூர்த்தி, மொரீசியஸ் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.சி.சம்பத், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், அதில், இதுவரை 22 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முனைப்பில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். தமிழ்நாடு தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்றும் திறன் வாய்ந்த மனிதவளம் நிறைந்த மாநிலம் என்றும் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இடம்பெற செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தான் சொல்ல வேண்டும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அதிமுக ஆட்சி கலைந்துவிடும் எனக் கூறி வரும் ஸ்டாலின், தற்போது தமிழகம் முதன்மை மாநிலமாக மாறியிருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் எனக் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version