"பொய் கூறி பிழைப்பு நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின்" – முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்!

திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கத்தை ஆதரித்து அலங்காநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசு, மக்கள் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டார். ஏழை-எளிய மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட, அதிமுக அரசு தனிக்கவனம் செலுத்திவருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமாரை ஆதரித்து, செக்கானூரணியில் முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திருமங்கலம் தொகுதியில் செயல்படுத்திய நலத்திட்டங்களையும், செயல்படுத்தப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டார். அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் அவதூறு பரப்புவதையே, ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அய்யப்பனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிகார வெறிபிடித்த கட்சி தி.மு.க. என விமர்சனம் செய்தார். தனது குடும்பத்தினர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டும் என நினைக்கும் கட்சி திமுக எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும், அதிமுக அரசு செயல்படுத்திவரும் சிறப்பான திட்டங்களால், தமிழ்நாடு தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version